999 செவிலியர் உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: பிப்.8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 

சென்னை: தமிழகத்தில் 999 செவிலியர் உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது. அதேபோன்று, மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர், சிறப்பு மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீஷியன், இதர மருத்துவப் பணிக்கான காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2026ம் ஆண்டு தொடங்கி 20 நாட்களே ஆன நிலையில் செவிலியர் உதவியாளர் கிரேடு – II பணிக்காக மொத்தம் 999 காலிப்பணியிடங்கள் நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செவிலியர் உதவியாளர் பயிற்சி சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் இது எழுத்துத் தேர்வின்றிய தகுதி அடிப்படையிலான தேர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணைத்தளத்தில் மட்டுமே பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கேட்டுகொண்டு உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்கம் ரூ.17,500 முதல் ரூ.58,100 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வரும் அடுத்த மாதம் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 

Related Stories: