சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பாக, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதால் முன்னதாகவே விமான நிலையத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் குடியரசு தின விழா, வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் சென்னை விமானநிலையத்திலும், பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 அடுக்கு பாதுகாப்பு முறை வருகின்ற 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், அதோடு 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் உச்சக்கட்ட பாதுகாப்பாக, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். அதைபோல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கின்றனர். விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து, தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
மேலும் விமானநிலைய மல்டி லெவல் கார் பார்க்கிங்கிற்குள் நீண்ட நேரமாக நிற்கும் கார்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டு கண்காணிக்கின்றனர். மேலும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனையிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஙிசிகிஷி பாஸ்கள் வழங்குவதிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அதுபோல் விமான பயணிகளுக்கும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை, விமானங்களுக்குள் உள்ளே செல்லும் இடத்தில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவி துருவி சோதிக்கின்றனர். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர்.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும், விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்குகின்றன. எனவே பயணிகள் அச்சமின்றி, வழக்கம்போல் அனைத்து விமானங்களிலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
