சேலம்: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாய்கடிக்கு செலுத்தப்படும் ஏஆர்வி தடுப்பூசி கொள்முதல் 9.36 லட்சம் டோஸ் ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெறிநோய் (ரேபீஸ்) என்பது ஒரு கொடிய வைரஸ் கிருமியால் உண்டாகும் நோயாகும். இது உடலின் நரம்பு மண்டலத்தை தீவிரமாக பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும். இதுவொரு குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது.
ரேபீஸ் பாதிப்பானது நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, பன்றி, வவ்வால் உள்ளிட்ட உயிரினங்களை எந்த வயதிலும் தாக்கும். தெருநாய்கள் மூலம் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் நோய் பரவுகிறது. அதேபோல், தடுப்பூசி போடப்படாத செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களிடம் இருந்து மனிதனுக்கும் நோய்தொற்று ஏற்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே ரேபீஸ் நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும், பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது. ஒருசிலர் நாய் கடித்தவுடன் சிகிச்சை பெறாமல் தவிர்த்து வருகின்றனர். இதன்காரணமாக ரேபீஸ் தொற்று பாதிப்பின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாலும், நோய் முழுவதும் குணமாகாத நிலையில் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேபீஸ் பாதிப்பு என்பது பொது சுகாதார பிரச்னையாக இருந்து வருகிறது. உலக அளவில் ரேபீஸ் இறப்புகளில் சுமார் 36 சதவீதம் பாதிப்பு இந்தியாவில் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 7 லட்சம் நாய்க்கடி பாதிப்புகள் பதிவாகி உள்ளன. நாய்கடி பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது.
நாய் கடித்தவுடன் முதல்தவணை தடுப்பூசி போடுகின்றனர். ஆனால், முதல்தவணை தடுப்பூசிக்கு பிறகு, மற்ற 3 தவணை தடுப்பூசிகளை முறையாக செலுத்திக்கொள்வதில்லை. இதனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் ரேபீஸ் பாதிப்பால் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது. ரேபீஸ் பாதிப்பை தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தில் நன்றாக தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேலும், கடிபட்ட இடத்தில் மஞ்சள், சுண்ணாம்பு, காபி உள்ளிட்டவைகளை தடவக்கூடாது. நாய் கடித்தவுடன் 4 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரேபீஸ் தடுப்பூசிகள் ஏஆர்வி மற்றும் ரேபீஸ் இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கு தமிழக சுகாதாரத்துறை ரூ.120 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டு ஏஆர்வி தடுப்பூசி கொள்முதல் 3.87 லட்சம் டோஸ்களில் இருந்து 2024-25ம் ஆண்டு 9.36 லட்சத்திற்கு அதிகமாக டோஸ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரேபீஸ் பாதிப்பால் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் வீட்டு செல்லப்பிராணிகள் மூலம் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஏஆர்வி தடுப்பூசியை நாய் கடித்த அன்றைய தினமே முதல் ஊசியை போட வேண்டும். அதன் பின்பு, 2வது தவணை தடுப்பூசியை நாய் கடித்த 3வது நாளும், 3வது தவணை தடுப்பூசியை நாய் கடித்த 7வது நாளிலும், 4வது தவணை தடுப்பூசியை நாய் கடித்ததில் இருந்து 28வது நாளிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
ரேபீஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரேபீஸ் ஏஆர்வி தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும் 4 தவணை தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொள்ளவும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
