அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு; தமிழக வளர்ச்சியால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

ஈரோடு: தமிழக வளர்ச்சியால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது திண்டல் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர் ஈரோடு; பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை, அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை.

கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை. மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் அமைச்சர் முத்துசாமி; பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தியவர் முத்துசாமி. திராவிட மாடல் என்பது வளர்ச்சி மாடல்; அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியாக இருக்க திட்டமிட்டோம். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி; ஈரோடு கிழக்கு தொகுதியில் ராகுல் காந்தி விரைவில் வேட்பாளரை அறிவிக்கவுள்ளார். நம்மை எதிர்த்து வாக்கு கேட்கிறவர்கள் திமுக அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள்

திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருக்கின்றனர். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் முழுக்க என்னால் நாள் முழுக்க சொல்லிக் கொண்டிருக்க முடியும். 86 விழுக்காட்டுக்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை மறைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கு டிஜிபியே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமிழ்நாடு வளர்ச்சியை கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். எடப்பாடி பழனிசாமி பொறாமையில் பேசி வருகிறார்.

அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டத்தை திருத்தியுள்ளோம். அதிமுக அரசின் சாதனைகளை சொல்ல எடப்பாடி பழனிசாமியிடம் எதுவுமில்லை. மதுரை எய்ம்ஸை தவிர பாஜக சாதனை என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒவ்வொரு செங்கல், செங்கல்லாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் கிளை செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்கவில்லை.

துரோகங்களின் முழுஉருவாக இருப்பதுதான் பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும். நீட் துரோகம், மெட்ரோ துரோகம் என என்.டி.ஏ. வின் துரோகம் லிஸ்ட் நம்மிடம் உள்ளது. என்டிஏ என்னும் துரோக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஏப்.23ம் தேதி நிச்சயம் தூக்கி எறிவார்கள் என்று கூறினார்.

Related Stories: