சென்னை: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185வது பிறந்த தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” -என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக, தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
முல்லைப் பெரியாறு அணையினைப் பெருமுயற்சியோடு கட்டி, அப்பகுதி மக்களின் பஞ்சம் – பசி நீக்கிய பென்னிகுவிக் பெருமகனாரின் குடும்பத்தினரைக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது சந்தித்திருந்தேன். பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு அவர்களே நம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள செய்தி கண்டு மகிழ்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
