தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

சென்னை: தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, பெருங்குடியில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ‘சென்னை மாநகராட்சி சமீபத்தில் பெருங்குடி குப்பைக்கிடங்கை Blue Planet Environmental Solutions நிறுவனத்தின் உயிரி அகழ்வு (Bio-mining) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளது. 50 ஆண்டுகால குப்பைகளை மறுசீரமைக்க முடியும் என்றால், இந்தியாவின் கழிவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வும், இது போன்ற பல வளர்ச்சி கதைகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் எக்ஸ் தளத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். “சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பாரம்பரியக் கழிவுகளில் இருந்து, பயோ மைனிங் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியுள்ளது. மீதமுள்ள கழிவுகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​நிலத்தில் கழிவுகளைக் கொட்டுவதை முற்றிலுமாக ஒழிப்பதிலும், திறமையான கழிவுப் பதப்படுத்துதலை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Related Stories: