சென்னை: இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் பஞ்சபதிகளில் மூலப்பதியாக முட்டப்பதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதி விளங்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரையில் வங்கக்கடலோரம் இந்த முட்டப்பதி அமைந்து உள்ளது.
இங்கு அய்யா வைகுண்டசாமியின் 194 -வது அவதார தினவிழா இன்று நடக்கிறது.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள். சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்; கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபம் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என்றவர் வைகுண்டர். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ எனும் அய்யா வைகுண்டர் கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாக கொண்டுள்ளோம்
நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
