டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 1970ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டெக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பேருந்தானது தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டெக்கர் பேருந்து கடந்த 2008ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது.

அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி, அயலக தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டெக்கர் பேருந்து அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரியகோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக, டபுள் டெக்கர் பேருந்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை, நந்தனம் வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் உள்ள கலாச்சார கட்டிடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சென்ட்ரல், துறைமுகம், எல்.ஐ.சி. உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவைக்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: