குவைத்: பிரெஞ்ச் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி பெனால்டி ஷூட்அவுட்டில் மார்ஸீல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குவைத்தில் பிரெஞ்ச் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) அணியும் மார்ஸீல் அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 13வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் அவுஸ்மேன் டெம்பெலே தனது அணிக்காக முதல் கோல் போட்டு அதிரடி காட்டினார். போட்டியின் 2வது பாதியில் மார்ஸீல் அணி வீரர் மேசன் கிரின்வுட் 76வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தனது அணியின் முதல் கோலை போட்டார்.
சிறிது நேரத்தில் அதே அணியின் வில்லியன் பேச்சோ 87வது நிமிடத்தில் அடுத்த கோல் போட்டு முன்னிலைப்படுத்தினார். போட்டியின் கடைசி கட்டத்தில் 90+5வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் கோன்சலோ ராமோஸ் அட்டகாசமாக அணியின் 2வது கோல் போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால் பெனால்டி ஷூட்அவுட் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் பிஎஸ்ஜி அணி சிறப்பாக செயல்பட்டு 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் லூகாஸ் செவாலியே சிறப்பாக செயல்பட்டு கோல்களை தடுத்ததால் இந்த வெற்றி வசப்பட்டது.
