குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னையில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் நசரத்புரம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3000 ரொக்கம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க, வீடு வீடாக டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வந்தது. டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெற உள்ள நிலையில் வரும் 9, 10, 11ம் தேதிகளில் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை, ஆலந்தூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் இன்று காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கனில் தெரிவித்த நாள், நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்

அதே நேரத்தில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொங்கல் பொருட்களையும், ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரத்தை வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயநிலை கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன

Related Stories: