கடலூர், ஜன. 8: கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் கணேஷ் என்ற செல்லப்பன்(28), மீனவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி பிரீத்தியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதேபோல் குடித்துவிட்டு வந்து, சண்டை போட்டதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, அதே ஊரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கணேஷ் அவரது வீட்டில் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரீத்தி கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
