தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின் இதுவரை 11,71,600 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின் இதுவரை 11,71,600 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த 19,566 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி17ல் வெளியாகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்–6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாகச் சமர்ப்பிக்க படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் தகுதியான குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

Related Stories: