* 3ம் பருவத்துக்கான பாட நூல்களை ஆசிரியர்கள் வழங்கினர்
சென்னை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டது. அதாவது டிசம்பர் 24ம் தேதி முதல் சுமார் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றும், உறவினர் வீடுகளுக்கு சென்றும் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். புதிய ஆண்டு தொடங்கி ஜனவரி 5ம் தேதியான இன்று 12 நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி திறப்புக்கான வளாக தூய்மைப் பணிகள் செய்யப்பட்டது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலில் வகுப்பறைகளில் அமர்வதை உறுதி செய்ய கல்வித்துறை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சில முக்கிய பணிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தி இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பள்ளி கட்டிடங்கள், மின் இணைப்புகள், குடிநீர் வசதி போன்றவை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பள்ளிகள் திறக்கும் நாளுக்குள் இவ்வனைத்தையும் பரிசோதித்து, மாணவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
பள்ளிக்குள் உள்ள மின் இணைப்புகள் மற்றும் சுவிட்ச் போர்டுகள் பாதுகாப்பாக உள்ளனவா? மின்கசிவு ஏதேனும் இருக்கிறதா? என்பதை தகுதி பெற்ற மின் பொறியாளர்களைக் கொண்டு சரிபார்க்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த பணிகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இதற்கான முன்னேற்பார்டுகள் வேகமாக நடைபெற்றது. இதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் முதல் தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளும் மீண்டும் இன்று காலை திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றன.
அரையாண்டு விடுமுறைக்கு பின் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். இதை தொடர்ந்து, முதல் நாளான இன்று மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதேபோன்று, திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் பின்தங்கிய பாடங்களில் கவனம் செலுத்தி, அவர்களின் தேர்ச்சியை மேம்படுத்த பாட ஆசிரியர்கள் தகுந்த நடவடிக்கை வேண்டும். நடத்தப்படாத பாடங்களை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை , புத்தாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும், தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் நேற்று இரவு முதல் சென்னை திரும்பினர். இன்று காலை, ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வந்தததால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி முதல் சென்னை வரை பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி, சிங்கம்பெருமாள் கோவில் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சுங்கச்சாவடியை கடந்து சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் சுங்கச்சாவடி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
தொடர் விடுமுறை
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 2026 ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சுமார் 15 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறையும், குடியரசு தினத்தை ஒட்டி 3 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் நிலையில், ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை நாட்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
