கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

 

ஈரோடு, ஜன.5: ஈரோடு சூரம்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு சூரம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய்கள் உள்ளன. இந்நிலையில், குடியிருப்புவாசிகள் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி வீசுவதால் அக்கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால், கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற செல்லாமல் தேங்கி கிடக்கிறது.
இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இது பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு,கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தூக்கி வீசுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: