திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் வகையில் செல்போன் எண், வலைதள விவரம், செயற்கை நுண்ணறிவு வலைவாசல்: பொதுமக்கள் கருத்து, பரிந்துரைகளை தெரிவிக்கலாம்

சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், எம்எல்ஏக்கள் தமிழரசி, டாக்டர் எழிலன், முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார்.

இந்த குழுவினர் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர். இதன் துவக்க நிகழ்வாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (போர்டல்) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பொதுமக்கள் 08069446900 என்ற தொலைபேசி எண்ணில் ஆலோசனை தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ்அப் எண்: 9384001724, மின்னஞ்சல்: dmkmanifesto2026@dmk.in, இணையதளம்: //www.dmk.in/ta/manifesto2026, சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26, செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai என்ற தளங்களின் மூலம் கருத்துகளையும் பரிந்துரைகளையும் திமுகவிற்கு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எங்களுக்கு தந்திருக்கக்கூடிய அறிவுரை, இந்த தேர்தல் அறிக்கை மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த கருத்தை இன்னும் விரிவான செயலாக்கமாக, செயல்வடிவமாக செய்து காட்டுவதற்காக தேர்தல் அறிக்கை குழு சார்பில் போர்டல் உருவாக்கியிருக்கிறோம். மக்களிடம் செல்லுங்கள், அவர்கள் சொல்லக்கூடிய கருத்துகளை கேளுங்கள் என்ற மைய கருத்தை வைத்துக்கொண்டு தான் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையும் திமுகவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துகளை கேட்டு உருவாக்கப்படும், இந்த தேர்தல் அறிக்கை தொடர்ந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கையாக தான் எப்போதுமே இருந்திருக்கிறது. அந்த வழியில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் என்ன தேவை என்று நினைக்கிறார்களோ, அதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த போர்டல் வழியாக பேசலாம், டைப் பண்ணலாம், உங்கள் கருத்துகளை அதில் பதிவிடலாம். அதை அந்த போர்டலில் உள்ள ஏஐ வழியாக எந்த இடத்தில் இருந்து வர்றீங்க, எந்த மாதிரியான கருத்து, உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை எல்லாம் பகிர்ந்து பார்த்து அதை எங்களுக்கு ரெக்கமன்டேசனாக எங்களுக்கு இந்த போர்டல் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: