தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று அதிமுக, பாமக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாவுக்கு அடிமை என்று சொல்கிறார்கள். நாமா அடிமையாக இருக்கிறோம்?. நாங்கள் மட்டும் இல்ல, எங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் கூட அடிமை கிடையாது. நியாயத்திற்காக போராடுவோம்.
மக்கள் பிரச்னைக்காக போராடுவோம். தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் திட்டத்திற்காக போராடுவோம். தமிழகத்திற்கு எதிராக எந்த வடிவத்தில் வந்தாலும், நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எதிர்ப்போம். நாங்கள் அடிமை கிடையாது. காவிரி நதிநீர் பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது.
அந்த நேரத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என்று பலமுறை நாங்கள் கூறினோம். இது மக்கள் சார்ந்த பிரச்னை. விவசாயிகளின் பிரச்னை. நாடாளுமன்றத்தில் 37 அதிமுக எம்பிக்கள், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக. மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
