பிரசாரத்திற்கு வாங்க… கெஞ்சும் அதிமுகவினர்: பிஎல்ஏவாக வேலை செய்றேன்… அண்ணாமலை விரக்தி

அதிமுக, பாஜ கூட்டணியில் கோவையில் 9 தொகுதிகள் அதிமுகவிற்கும், ஒரு தொகுதி பாஜவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு தொகுதிக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனும் குடுமி பிடி சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனது மேலிட செல்வாக்கை பயன்படுத்தி வானதி சீனிவாசன் தனது சீட்டை உறுதி செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை கட்சியில் இருந்து ஒதுங்க தொடங்கினார். இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்களும் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே கோவையில் செந்தில் பாலாஜியை களம் இறக்கி இருப்பதால் கதிகலங்கி உள்ள அதிமுகவினர், பாஜ.,வினரும் ஒதுங்கி விட்டால் 2வது இடம் கிடைப்பது கூட கேள்விக்குறியாகி விடும் என பீதி அடைந்துள்ளனர். இதனால் அதிமுக சிங்காநல்லூர் வேட்பாளர் கேஆர் ஜெயராமன் மற்றும் தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜூணன் ஆகியோர் அண்ணாமலையை அவரது வீட்டில் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். மேலும், தங்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோல், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து அண்ணாமலையிடம் நேற்று ஆதரவு கேட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் சந்தித்தபோது, அவர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘‘நான் 23ம் தேதி அன்று பாஜ சார்பில் பிஎல்ஏ-வாக காலையில் வாக்குச்சாவடி உள்ளே போய் உட்கார்ந்துவிடுவேன். என் ஓட்டை போட்டு விட்டு முழுவதுமாக பணிகளை முடித்துவிட்டு தான் வெளியில் வருவேன். பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி அண்ணாகிட்ட பிரசாரம் பண்ணவும் சொல்லிவிட்டேன்.

எனக்கு பூத்தில் பணி அளிக்கவும் கூறியுள்ளேன். இப்படி இருக்க, நீங்க என்கிட்ட ஆதரவு கேட்டு வந்தால் எப்படிங்க’’ என கூறி உள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, மோடியிடம் அடமானம் வைத்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையிடம் சரண்டராகி வருவதாக தொண்டர்களே புலம்ப தொடங்கி உள்ளனர்.

* இன்று மோடி, நாளை விஜய்: ஒரே மேடையில் 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி பிரசாரம்; அமித்ஷா, எடப்பாடி, சீமானும் முற்றுகையால் களைகட்டும் புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணி முதல் 5.15 மணி வரை ஒரு மணி நேரம் ‘ரோடு ஷோ நடத்துகிறார். நாளை தவெக தலைவர் விஜய் 4 இடங்களில் வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்கிறார். இதேபோல் நாளை மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்கிறார்.

5ம் தேதி பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் காரைக்காலுக்கு வருகிறார். அங்கு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர், 5ம் தேதி மாலை புதுவை மணவெளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதே போல், 5ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் அண்ணா திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
6ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அவர் திருக்கனூர் கடைவீதியில் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அதே நாள் மாலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். அதே போல் அன்று மாலை ராகுல்காந்தி புதுவையில் பிரசாரத்துக்கு வர முடிவு செய்யப்படிருக்கிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஒன்றாக புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் 6ம் தேதி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாகன பிரசாரம் செய்கிறார். புதுவையில் வாக்குபதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

* சீமான்லாம் ஒரு ஆளா? நயன்தாரா மதுவிலக்கு; சமந்தா போக்குவரத்து; கீர்த்தி சுரேஷ் கூட்டுறவு; அமைச்சர் பட்டியலை வாசித்து முதியவர் அட்ராசிட்டி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் மதுபோதையில் பேருந்து வெளியே வரும் இடத்தில் நின்றுகொண்டு, ‘‘அடுத்த வாரம் விஜய் ஓட்டு கேட்டு ஒட்டன்சத்திரம் வருகிறார். அவருடன் அனைத்து நடிகைகளும் வருகிறார்கள். சொல்றேன்… நல்லா கேட்டுக்குங்க… நயன்தாராவுக்கு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர், சமந்தா போக்குவரத்து துறை அமைச்சர், கீர்த்தி சுரேஷ் கூட்டுறவுத்துறை அமைச்சர். சீமான்லாம் ஒரு ஆளா… எங்க விஜய் கிட்ட மோத முடியுமா? மோதுனா என்ன ஆகும் தெரியுமா’’ என்று எம்ஜிஆர் பாடலை பாடிக்கொண்டு முதியவர் செய்த அட்ராசிட்டியால் பேருந்து நிலையம் சிறிது நேரம் கலகலப்பாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டது.

Related Stories: