சென்னை: தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தொடர்து ஈடுபட்டுவருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிதாக கூறி 3 மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
