விஜய் கூண்டுக்கிளியாக உள்ளார்; 20 மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இருந்து விலக உள்ளனர்: பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி: 20 தவெக மாவட்ட செயலாளர்கள் என்னிடம் பேசிக்கொண்டுள்ளனர். பொங்கலுக்குப் பிறகு அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும் என்று நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் துணை முதல்வரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்துக் கொண்டு தாய், தந்தையரை ஓரம் கட்டி வருகிறார். கூடவே இருந்த ஜெயசீலன் உள்பட பலரும் இவருடன் தற்போது இல்லை. தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை. ஏளனமாக பார்க்கின்றார்கள். அங்கு சில மாபியா கும்பல் இருக்கின்றன. புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் போன்றோரை வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள். விஜய்க்காக உழைத்தவர்கள் யாருக்கும் தற்போது மரியாதை இல்லை.

தூத்துக்குடி தவெக பிரமுகர் அஜிதா நடிகர் விஜய் முன்னே செல்லும் போது அவரைக் கூட விஜய் பார்க்கவில்லை. ஒரு 3 நிமிடம் அவருக்காக ஒதுக்கி அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அந்த நேரத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர் தான் புஸ்ஸி ஆனந்த். தற்போது தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் அஜிதா. ஒரு பெண் அவர் முன்னே சென்று பார்க்க வேண்டும் என்று சொல்லும்போது அவரை பார்க்காமல் விஜய் போனால் அவர் யாரைத்தான் பார்ப்பார்.

விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும். தற்போது வரை பூத் கமிட்டி வலுப்படுத்தவில்லை. இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். நடிகை சினேகா, நமீதா போன்றவர்கள் வந்தாலும் கூட்டம் வரும். இதற்கு முன்னதாக சில்க் ஸ்மிதா வரும்போது கூட்டம் வரத்தான் செய்தது. நடிகர்கள் வந்தால் அனைவருடைய குடும்பமும் வந்து பார்க்கத்தான் செய்யும். இது இயல்பு. இந்த கூட்டத்தை பார்த்து விஜய் முதல்வராகி விடலாம் என்று மாயையில் இருக்கிறார். ஆனால் திமுக நல்ல, நல்ல திட்டங்களை அக்கறையோடு செய்து கொண்டு வருகிறது.

தற்போது 20 மாவட்ட செயலாளர்கள் என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார்கள். பொங்கலுக்குப் பின் அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியானார்கள். அதில் 39 பேர் பொதுமக்கள் தான். 3 மணிக்கு வருவதாக கூறிவிட்டு 7 மணிக்கு வந்தது, திட்டமிட்ட சதி. இதற்கு முழு பொறுப்பும் அவர் தான். 30 ஆண்டு காலம் அவரோடு இருந்து உழைத்து அவரது வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் நானும் ஒருவன். அவர் கட்சியில் கட்டமைப்பு முழுமையாக இல்லை. நேர்மையும் இல்லை. கூண்டுக் கிளியாக இருந்து கொண்டு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டு வருகிறார். மக்களுக்கு அவர் யார் என்று தெரியும். அது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும். விஜய் ஒரு கிளாமர். அவரை பார்த்து விட்டு சென்று விடுவார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள். இவ்வாறு பிடி செல்வக்குமார் என்றார்.

தவெகவில் வசூல் வேட்டை
தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் இருக்கின்றார்கள். விஜயை சுற்றி இருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியம். விஜய் கட்சியில் வசூல் வேட்டை தான் நடைபெறுகிறது. விஜய் கண்ணும் கருத்துமாக இல்லை. உண்மையான தீய சக்தி யார் என்றால் விஜய் தான். இவர் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார். ரூ.200 கோடி சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்கின்றாரே, ரூ.100 கோடியில் இதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி இருக்கலாமே? நான் விஜயுடன் பயணிக்கும்போது சென்னை- கன்னியாகுமரி வரை ஆறுகளை சுத்தப்படுத்தக் கூறியிருந்தேன். ரூ.15 கோடி தான் செலவுத்தொகை. ஆனால் அதனை அவர் செய்யவில்லை என்றும் பி.டி.செல்வகுமார் கூறினார்.

மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வார்
சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பு அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்வார். ஜனநாயகன் படம் வெளியிடும்போது இவரது ரசிகர்கள் ரூ.3000, ரூ.2000 என்று கொடுத்து டிக்கெட் வாங்குவதை ரசிகர்களிடம் பிளாக் டிக்கெட் விற்கக் கூடாது என்று அவர் தைரியமாக அறிக்கை விடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: