- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மத்திய அமைச்சர்
- சென்னை
- யூனியன்
- வெளிவிவகார அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் நீண்டகால பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: நேற்று முன்தினம் (22ம் தேதி) ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (23ம் தேதி) சிறை பிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த நீண்டகால பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு / மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழ்நாட்டை சேர்ந்த 248 மீன்பிடி படகுகளும், 62 மீனவர்களும் (2024ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உள்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளனர். இலங்கை கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
