×

மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு

டாக்கா: வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீல் உஸ்மான் ஹாதியின் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32) கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹாதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18ம் தேதி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஹாதியின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரி நடக்கும் இப்போராட்டம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கும் எதிரானதாகவும் நடந்து வருகிறது. ஹசீனா ஆதரவு பத்திரிகைகள், ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறையால் கடந்த 2 நாட்களாக தலைநகர் டாக்காவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாதியின் உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

அவரது குடும்பத்தினர் விருப்பப்படி, தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பிளாசா பகுதியில் தேசியக் கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கையொட்டி நேற்று ஒருநாள் அரசு சார்பில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அடக்கம் செய்யும் இடத்திற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், ஹாதியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே திரண்டனர். இறுதி சடங்கு நிகழ்வில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் பங்கேற்றார்.

* இந்து நபர் கொலையில் 7 பேர் கைது
கடந்த வியாழக்கிழமை இரவு, ஹாதியின் மரணம் அறிவிக்கப்பட்டவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான மைமன்சிங் நகரில் மத நிந்தனை செய்ததாக 25 வயது இந்திய இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் கும்பலால் அடித்து, எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 7 பேரை விரைவு அதிரடிப் படை கைது செய்துள்ளதாக இடைக்கால அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஏழை இந்து இளைஞனின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேச இடைக்கால அரசை பாராட்டும் அதே வேளையில், கொலையாளிகளை தண்டிக்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும் வங்கதேச அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Bangladesh ,Dhaka ,Sheryl Osman Hadi ,Sharif Osman Hathi ,Inculab Munch ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...