புதுடெல்லி: யெஸ் வங்கி சார்பில் அனில் அம்பானி குழுமத்திற்கு 2017 மார்ச் 31 நிலவரப்படி ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகை 2018 மார்ச் 31 நிலவரப்படி ரூ.13 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் யெஸ் வங்கிக்கு ரூ.3,300 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வழங்கிய கடன் தொகையில் பெரும் பகுதி வராக்கடனாக மாறியதாகவும் வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கிக் கடன் மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அனில் அம்பானியை அழைத்து விசாரணை நடத்தியது. நேற்று அவரது மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடமும் டெல்லியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
