சென்னை: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து வி பி – ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:
2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது, இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில், இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் ரூ.12,000 கோடிஊதியமாக வழங்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25ம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலையை வழங்கியுள்ளது, 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனித நாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு ரூ.13,400 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது. இந்த சட்ட முன்வடிவு மீதான முக்கிய ஆட்சேபனைகள், தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து விநியோக அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு மாறுதல், இந்த சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநில வாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது. இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலை குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப் பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, அதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும், வரவுசெலவுத் திட்ட வரம்புக்குட்பட்ட ஒரு திட்டமாக மாற்றும் வகையில் உள்ளது.
இந்த சட்ட முன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும். ஆகவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவானது, கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்வதை உறுதி செய்திடும் பணியில் தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கத் தயாராக உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
