தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோ பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று வைகோ கூறினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் திருச்சியில் இருந்து மதுரை வரை தனது தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி திருச்சி உழவர் சந்தை திடலில் தொடங்கி வைக்க உள்ள விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி:
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்கின்ற விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகிற ஜனவரி 2ம் தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இந்த நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். திருச்சி உழவர் சந்தையில் மது ஒழிப்பு நடைபயணத்தை ஜனவரி 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஜனவரி 12ம் தேதி மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மக்கள் மன்றத்தில் திமுக கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது. யார் எந்த முயற்சி செய்தாலும் தவிடு பொடியாகிவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு இருப்பதை மக்கள் மத்தியில் பார்க்கிறேன். திமுக கூட்டணி வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: