சென்னை: 100 நாள் வேலை திட்ட நிதி பகிர்வு மற்றும் மகாத்மா காந்தி பெயரை மாற்ற கூடாது என ஒன்றிய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல.
இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். இந்த திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும்.
