*அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அப்போது, 612 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி, பயிர் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 612 நபர்கள் மனு அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அரசு திட்ட உதவிகள் கோரும் மனுக்கள் மீது, விசாரணை நடத்தி தகுதியுள்ள பயனாளிகளுக்கு உடனடியாக திட்டப்பயன்களை வழங்க வேண்டும் என்றார்.குறைதீர்வு கூட்டத்தின்போது, தீக்குளிக்கும் சம்பவங்களை தவிர்க்க, கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
