×

தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்

மதுரை: தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை வாதிட்டுள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தாங்கள் அறிய விரும்புவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இதையடுத்து. காவல்துறை தரப்பில், “திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தால் கடந்த காலங்களில் 2 முறை பிரச்சனை எழுந்துள்ளது. 1862, 1960ம் ஆண்டுகளில் தீபமேற்றும் முயற்சியால் பிரச்சனை நடந்துள்ளது, அப்போது அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என பிரச்சனை எழுந்தது, அப்போதும் அனுமதிக்கவில்லை. தீபம் ஏற்றும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் ஏதும் மறுக்கப்படவில்லை. தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் தர்காவுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவர். மலை உச்சியில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என ஆகம விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை.

கார்த்திகை தீபம் அன்று வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது. அதற்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கியது. புதிதாக மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து பாதுகாப்பு தரக்கூறுவது ஏற்புடையதல்ல. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்று பழைய உத்தரவுகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போதுதான் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்று கூறப்படுகிறது. தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்றுதான் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியும். தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். நெல்லித்தோப்பு பகுதிக்கு பல லட்சம் இஸ்லாமியர்கள் செல்கின்றனர்.

ஆனால் தனி நீதிபதி நெல்லித்தோப்பு பகுதி வழியாக சென்று தூணில் தீபம் ஏற்ற சொல்கிறார். மதம் சார்ந்த விவகாரங்களில் முடிவு எடுக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. இது ஜனநாயக நாடு; சமூக அமைதியை கெடுக்கும் வகையில் தீர்ப்புகள் இருக்கக் கூடாது. மலை உச்சியில் இருப்பது தீபம் ஏற்றும் தூண்தானா என்பது உறுதியாக தெரியாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். தனி நீதிபதி அவர் எடுத்த சத்தியப்பிரமாணத்துக்கு எதிராக செயல்படுகிறார். இவ்வாறு சென்றால் தேர்தலில் நிற்கக் கூட வாய்ப்புள்ளது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : Dharga ,Deepam ,Madurai ,Thiruparangantharam Deepam ,Darga ,Thiruparangunaram ,
× RELATED சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி...