கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு குவியும் கேரளா ஆர்டர்கள்

*தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்ப ஆயத்தம்

ஓசூர் : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்பி வைக்க ஆயத்தமாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனால், இப்பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட மலர் செடிகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் மலர்களை பறித்து ஓசூர் சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மூட்டை கணக்கில் பூக்களை அனுப்பி வைக்கின்றனர்.

குறிப்பாக கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் விழாவில் சாமந்தி பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. ஓணம் பண்டிகை சீசனுக்கு ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வெள்ளை சாமந்தி உற்பத்தி செய்து சுமார் ஆயிரம் டன்னுக்கு மேல் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

அதே போல், கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் கிறிஸ்தவ திருமண விழாக்களில், வெள்ளை ரோஜாக்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஏராளமான திருமணங்கள் நடைபெறுவதால் வெள்ளை ரோஜாக்களை உற்பத்தி செய்து, ஆண்டுதோறும் 20 லட்சம் மலர்கள் அனுப்புகின்றனர்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவினை எதிர்நோக்கி, பாகலூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளை ரோஜா சாகுபடி செய்துள்ளனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெள்ளை மற்றும் கலர் ரோஜாக்களை அறுவடை செய்து, அதனை குளிர்ந்த அறையில் பதப்படுத்தி வைக்கும் பணியை சாகுபடியாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹரீஷ் என்பவர் கூறியதாவது: ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சீசனுக்கு தகுந்தாற்போல் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் பண்டிகையின் போது, மஞ்சள் சாமந்தி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், திருமண நிகழ்வில் கலர் ரோஜா பயன்படுத்துகின்றனர். ஆனால், கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது வெள்ளை சாமந்திக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் திருமண விழாவின்போது வெள்ளை ரோஜாவிற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், ஓசூர் பகுதியில் ஓணம் பண்டிகைக்காக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெள்ளை சாமந்தியும், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி பசுமை குடில்கள் மூலம் சுமார் 500 ஏக்கரில் வெள்ளை ரோஜாவும், 1,000 ஏக்கரில் கலர் ரோஜாவும் சாகுபடி செய்து ஆண்டுதோறும் கேரளாவிற்கு அனுப்புகிறோம்.

அதே போல், இந்த ஆண்டு வெளிநாடுகளில் வசிக்கும் கேரளா மக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு வருகின்றனர். கிறிஸ்துமஸ் முடிந்து அடுத்த நாள் தொடர்ந்து, ஜனவரி 10ம் தேதி வரை கிறிஸ்தவர்கள் திருமணம் அதிகளவில் நடைபெறும். அப்போது, வெள்ளை ரோஜா தேவை அதிகரிக்கும். இதனால், ஆர்டர் குவிந்து வருகிறது. ஆர்டரின் பேரில், வரும் 20ம் தேதி முதல் தினமும் 2 லட்சம் வெள்ளை ரோஜாக்களை கேரளாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

அதற்காக தற்போதே ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளோம். வெள்ளை ரோஜா, வெள்ளை ஜர்பரா, வெள்ளை ஜிப்சோபிலா ஆகிய மலர்களை அறுவடை செய்து, கவர்கள் மூலம் பேக் செய்து குளிர்ந்த அறையில் அடுக்கி வைத்து அடுத்த வாரம் கேரளாவிற்கு அனுப்ப உள்ளோம்.

மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் ரோஜா மலர்களை அனுப்பி வைக்க உள்ளோம். இந்த ஆண்டு அதிகளவில் ஆர்டர் கிடைத்துள்ளது. ஆனால், பனி தாக்கத்தால் ரோஜாவில் டவுனி நோய் தாக்கி 40 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு உள்ளூரில் ரூ.50க்கு விற்பனையாகிறது. கேரளா மற்றும் மற்ற மாநிலங்களில் சீசனுக்கு ரூ.200க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: