ஈரானின் “ஹோர் முஸ்”நீரிணை மூடப்பட்டுவிட்டால் தெற்காசியாவின் ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும் : கவிஞர் வைரமுத்து

சென்னை : எல்லா மனிதரும் போருக்கு எதிரான பதாகையாக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாக குற்றம்சாட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி கூட்டு தாக்குதலை தொடங்கின.இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஈரான் ராணுவம் இஸ்ரேலை மட்டுமின்றி அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பக்ரைன், ஜோர்டான் மீது ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. 4வது நாளாக இப்போர் தீவிரமடைந்து, விரிவடைந்தும் வருகிறது.

இதனிடையே கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“போர் என்பது
மனித குலத்தின்
சமநிலையைச் சாய்த்துவிடும்

மனிதர்களின்
தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்

அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்

பைத்தியக்காரன் இழுக்கும்
நேர்கோடு
எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான்

நமது சாப்பாடும் தூக்கமும்
ஏதோ ஒரு நாட்டின்
நகர்வோடு
முடிச்சுப் போடப்பட்டுவிட்டது

ஈரானின் “ஹோர் முஸ்”
நீரிணை மூடப்பட்டுவிட்டால்
தெற்காசியாவின்
ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும்

ஒவ்வொரு வீட்டு உண்டியலும்
களவாடப் படும்

மூளும் போர்
நீளும் போராக இல்லாமல்
நிறுத்தப்பட வேண்டும்

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில்
நாற்காலிகளில் ஏறிநின்று
பேசவேண்டும்

‘போர் ஒழிக’

இல்லையேல்
ஒவ்வொரு நாட்டுச் சூரியனும்
மூடப்படும்

தொலைக்காட்சிகளின்
போர்க் காட்சிகளை
வாண வேடிக்கையென்று
காணவேண்டாம் யாரும்

அதுவே
சொந்த வீதியில் நடந்தால்
என்னவாகும் என்று
எண்ணிப் பாருங்கள்

எல்லா மனிதரும்
போருக்கு எதிரான
பதாகையாக வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: