கரூர், டிச. 16: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்து பயன்பெற்று வருகின்றனர்.
இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டு துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார். கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் என மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 36 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 1 பயனாளிக்கு ரூ.444 மதிப்பிலான மடக்கு குச்சியையும், 1 பயனாளிக்கு ரூ.3825 மதிப்பிலான காதொலி கருவியையும் கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் புதிய மின்னணு அட்டை 1 பயனாளிக்கு என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.27,159 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சரவணன், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் சிவக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக்கேயன் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
