×

வெளி மாநில பட்டாணி வரத்து அதிகரிப்பு

ஊட்டி, டிச.16: வெளி மாநில பட்டாணி வரத்து அதிகரித்துள்ளதால் சாலையோரங்களில் வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி உற்பத்தியில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பட்டாணி, அவரை, டர்னீப், மேரக்காய் உட்பட பல்வேறு மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக ஊட்டியில் விளையும் அனைத்து காய்கறிகளுக்கும் மார்க்கெட்டில் விலை அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, ஊட்டி சுவீட் பட்டாணிக்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும். சாதாரணமாக கிலோ ஒன்று ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படும். இந்நிலையில், தற்போது வெளி மாநில பட்டாணி அதிகளவு ஊட்டி மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு வந்துள்ள நிலையில், ஊட்டி பட்டாணி விலையும் சரிந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து, அதாவது டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்துள்ள பட்டாணி பெரும்பாலான கடைகளில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். விலை அதிகம் கொடுத்து ஊட்டி பட்டாணியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஊட்டி பட்டாணி விலை மார்க்கெட்டில் சரிந்துள்ளது.

Tags : Ooty ,Neelgiri district ,
× RELATED பூங்கா நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் செடிகள் கொண்டு அலங்காரம்