சென்னை விமான நிலையத்தில் இன்று 10வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பிரச்சனைகள் காரணமாக, இன்று சென்னை விமான நிலையத்தில், 10-வது நாளாக மொத்தம் 36 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்கள் 24, சென்னைக்கு வருகை விமானங்கள் 12 என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பணியாற்ற பற்றாக்குறை, விமானிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அதைப்போல் சென்னை விமான நிலையத்திலும் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இன்று பத்தாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 36 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், பாட்னா, புவனேஸ்வர், கொச்சி, கொல்கத்தா, கோவை உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சிங்கப்பூர், பினாங்கு ஆகிய சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் சென்னைக்கு வரும் விமானங்கள் சிங்கப்பூர், பினாங்கு, ஜெய்ப்பூர், பெங்களூர், கோவை, டெல்லி, மும்பை உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று சென்னை விமான நிலையத்தில் 70 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விமானங்களில் ரத்து எண்ணிக்கை 36 ஆக குறைந்துள்ளது பயணிகளுக்கு ஓரளவு ஆறுதலை கொடுத்துள்ளது. இப்பிரச்சினை விரைவில் சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: