சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை19.34 கிலோமீட்டர் தூரம் பறக்கும் ரயில் ஓடுகிறது. தற்போது வேளச்சேரியில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. 1995-ல் இந்த சேவை ஆரம்பமானது. இந்த வழியில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். ஆனால் இதன் திறன் 4 லட்சம் பேர் வரை பயணிக்கும் அளவுக்கு இருக்கிறது. கடற்கரை, மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 3 நிலையங்களில் மட்டும் 40% பயணிகள் இருக்கிறார்கள்.
பீக் நேரத்தில் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. பார்க் டவுன் நிலையத்தில் இருக்கும் குறுகலான மேம்பாலம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒவ்வொரு ரயில் வரும்போதும் இரண்டு திசையிலிருந்தும் கூட்டம் அலைமோதுகிறது. 5 முதல் 10 நிமிடம் வரை மேம்பாலத்தை கடக்க பயணிகளுக்கு ஆகிறது. நடக்கவே இடம் இல்லாமல் இருக்கிறது என்று பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறபராமரிப்பு சரியாக இல்லாததால் பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வு இல்லை என்று அச்சப்பட்டு வருகின்றனர்.
இதனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.குறிப்பாக சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசு முழுவதுமாக வாங்க இருக்கிறது. இப்போது இந்திய ரயில்வேயிடம் 33 % இருக்கிறது. அதை 600 முதல் 700 கோடி ரூபாய்க்கு வாங்கப்போகிறது தமிழக அரசு. மீதமுள்ள 67% ஏற்கனவே மாநில அரசுக்குதான் சொந்தம்.இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் இறுதி ஒப்பந்தம் போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வாங்கிய பிறகு நவீன மெட்ரோ போல மாற்ற உலக வங்கியிடம் 4,000 கோடி ரூபாய் கடன் கேட்டு பேச்சுவார்த்தை நடக்கிறது.
புதிய பெட்டிகள் வாங்க மட்டும் 1,000 கோடி ரூபாய் செலவாகும். கிட்டத்தட்ட 20 நிலையங்களை சரிசெய்வது, எஸ்கலேட்டர் போடுவது, 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசதிகளை உருவாக்குவது என பல வேலைகள் செய்ய இந்த பணம் உபயோகப்படும். தமிழக அரசின் கீழ் வந்ததும் ரயில் நிலையங்கள் முழுமையாக புதுப்பிக்கப்படும். ஏசி ரயில்கள் வரும். நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். மெட்ரோ தரத்தில் நிலையங்கள் மாற்றப்படும். லிஃப்ட், எஸ்கலேட்டர், சுத்தமான கழிப்பறை, நல்ல வெளிச்சம் என அனைத்து வசதிகளும் செய்யப்படும். 2027 டிசம்பரில் இது மெட்ரோ போல செயல்பட ஆரம்பிக்கும். இது இந்தியாவில் ரயில்வேயிலிருந்து மெட்ரோவுக்கு மாறும் முதல் சேவை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் மே 2025ல் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் இதை பேசியதால் இந்த ஒப்பந்தம் வேகமாக நடந்தது வருகிறது. சென்னையின் பயண நேரத்தை குறைக்க கும்தா பெரிய திட்டம் போட்டிருக்கிறது. இப்போது பயணிகள் பீக் நேரத்தில் சென்னையில் 90 நிமிடம் வரை பயணிக்க வேண்டியிருக்கிறது. இதை 2048-ல் 60 நிமிடமாக குறைக்க திட்டம். மொத்தம் 2.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போகிறார்கள். இதில் 1.92 லட்சம் கோடி பொது போக்குவரத்துக்காக செலவிடப்படும். இதனால் மொத்தமாக சென்னையின் போக்குவரத்து மாறப்போகிறது.
