அவிநாசி, டிச. 5: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நேற்று அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு கோயில் முன்புறம் உள்ள ஸ்தீப கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீப தரிசனம் செய்து, அவிநாசியப்பரை வழிபட்டனர்.
இதேபோல திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோயில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோயில், சேவூர் அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
