கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பின் சேலத்தில் 4ம் தேதி மீண்டும் பிரசாரம் தொடங்கும் விஜய்; போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு: குறுகிய இடத்தை கேட்டு தவெக அடம்

சேலம்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்திற்கு பின், தவெக தலைவர் விஜய் வரும் 4ம் தேதி சேலத்தில் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். தவெக தலைவர் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 2 மாதத்திற்கு முன் சனிக்கிழமை தோறும் பிரசாரத்தை தொடங்கினார். கரூரில் நடந்த பிரசாரத்தின் போது பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இதையடுத்து பிரசார பயணத்தை நடிகர் விஜய் ரத்து செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போனவர்களின் உறவினர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறாமல், அவர்களை சென்னைக்கு வரவழைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். 41 பேர் பலியான ஈரம்கூட இன்னும் காயாத நிலையில் அவர் மீண்டும் பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். சேலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேசிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழன் பார்த்திபன் கூறுகையில், ‘வருகிற 4ம் தேதி சேலத்தில் இருந்து நடிகர் விஜய் பிரசார பயணத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகேயுள்ள இடம் என 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்’ என்றார்.

தவெகவினர் கேட்டுள்ள 3 இடங்கள் குறுகிய இடங்கள். இங்கு 25 ஆயிரம் பேர் வரைதான் கூட முடியும். இதனால், நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்த சீலநாயக்கன்பட்டியில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி திறந்தவெளி மைதானத்தில் பிரசாரத்துக்கு திட்டமிடுங்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் வரை கூடலாம். குறுகிய இடத்தில் நெரிசலை தவிர்க்க இந்த மைதானத்தில் பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால், தவெகவினர் அளித்து உள்ள 3 குறுகிய இடங்களில் ஒரு இடத்தை கொடுங்கள் என பிடிவாதமாக உள்ளனர். நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியும், திறந்தவெளி மைதானத்தை பயன்படுத்தாமல் குறுகிய இடத்தை தவெக கேட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேஷ் கூறுகையில், 4ம் தேதி கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டனர். 3 இடத்தை குறிப்பிட்டு கேட்டுள்ளனர். ஆனால் எவ்வளவு பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று தெரிவிக்கவில்லை.

எந்த இடத்தில் எவ்வளவு பேர் வரை இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இடத்தை அளவீடு செய்து விட்டு வருவதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை கார்த்திகை தீபத்திற்காக போலீசார் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். 5ம் தேதி தான் பணிக்கு திரும்புவார்கள். இதனால் வேறொரு நாளுக்கு கூட்டத்தை நடத்துமாறு கேட்டுள்ளோம். இதற்கான விளக்கத்தை மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

Related Stories: