பழநி: பழநியில் இன்று மாலை பங்குனி உத்திர விழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதனால், நகர் முழுவதும் அரோகரா கோஷம் ஒலிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. முன்னதாக வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமிக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிரதத்தில் சாமி சன்னதி வீதியாக வழியாக கிரிவீதிகளில் வலம் வருதல் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணி, ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், அன்னபூரனி மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி நேற்று மாலையில் இருந்தே பழநி நகரில் ஏராளமான பக்தர்கள் குவியத் துவங்கி விட்டனர். நகர் முழுவதும் பச்சை, காவி ஆடை உடுத்திய பக்தர்களின் நடமாட்டங்கள் அதிகளவு இருந்தது. பக்தர்கள் ஆடிய காவடி ஆட்டம், கும்மியாட்டம் காண்போரை பரவசமடைய செய்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீர்த்த கலசங்கள் கொண்டு வருதல் போன்ற நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையில் மலைக்கு செல்லவும், படிவழி பாதை வழியாக கீழிறங்கும் வகையிலும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக பழநி நகரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிழல் பந்தல் அமைப்பு பழநி நகரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் வெயிலில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சன்னதிவீதி மற்றும் மலைக்கோயில் வெளிப்பிரகாரங்களில் பெரும்பாலான இடங்களில் நிழற்பந்தல்கள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தரைகளில் தேங்காய் விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. கோயில் நிர்வாகம் மற்றும் சமூகசேவை அமைப்பினர் சார்பில் பல இடங்களில் அன்னதானம், நீர்மோர், பிஸ்கட் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. மலைக்கோயிலில் தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் தீர்த்த கலசங்கள் கொண்டு வருபவர்களுக்கு பிரத்யேக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
