சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்தவர் மகாதேவ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவரிடம், 2021ல் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கொங்கணாபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் உள்ளிட்ட சிலர் ரூ.22 லட்சத்தை பெற்றுள்ளனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மகாதேவ் அளித்த புகாரின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், அரசு வேலை வாங்கி தருவதாகநித்தியானந்தம், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 6 பேர், மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்த 33 இளைஞர்களிடம் ரூ.3.50 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் நித்தியானந்தத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மோசடி வழக்கில் தொடர்புடைய கொங்கணாபுரம் காளிப்பட்டி ரோட்டில் வசிக்கும் சந்தோஷ்குமார் (எ) சந்தோஷ்பாண்டி (51), சேலம் சித்தனூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று தனிப்படை போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் நர்சிங் கல்லூரி நடத்தி வருவதும், இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததும், அந்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரியவந்துள்ளது.
