9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஏட்டு போக்சோவில் கைது

நெல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர், நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். ஏட்டு சசிகுமார் அந்த பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் அவர்களது மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் குறித்த `குட் டச்’, `பேட் டச்’ வகுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.

அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமாரின் பாலியல் தொந்தரவு கொடுத்த விபரம் புரிய வந்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக ஒன் ஸ்டாப் சென்டரை தொடர்புகொண்டு அந்த மாணவிக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாளை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகாரை பெற்று நேற்று முன்தினம் இரவு ஏட்டு சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: