×
Saravana Stores

குறைந்த காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை எதிரொலி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்

*திருப்பதி கலெக்டர் வேண்டுகோள்

திருப்பதி : ராயலசீமா மாவட்டத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை எதிரொலியாக கடலோ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என திருப்பதி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்வர், எஸ்.பி.சுப்பாராயுடு, இணை கலெக்டர் சுபம் பன்சால், மாவட்ட வருவாய் அலுவலர் பென்சல கிஷோர் உள்ளிட்ட மாவட்ட அலுவலர்களுடன் அனைத்து வருவாய் கோட்டங்கள், மண்டலங்கள், கிராமங்கள் மற்றும் வார்டு செயலக அலுவலர்களுடன் மெய்நிகர் முறையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது: வரும் 14ம் தேதி (இன்று) முதல் 17ம் தேதி வரையிலான நான்கு நாட்களில், சத்யசாய் மாவட்டம், அன்னமையா மாவட்டம், சித்தூர் மாவட்டம், திருப்பதி, கடப்பா உள்ளிட்ட ராயலசீமா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

திருப்பதி மாவட்டத்தின் கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, கடலோர மண்டலங்களான சில்லக்குரு, வாகாடு, கோட்டா சூலூர்பேட்டை, கூடுரு கோட்டத்தில் உள்ள தடா மற்றும் பிற கடலோர மண்டலங்கள் மற்றும் கிராமங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்கள் மற்றும் கிராமங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.குறிப்பாக நகரில் கனமழை பெய்தால், நகரப்பகுதி தண்ணீரில் மூழ்காமல் இருக்கவும், குப்பைகள் தேங்காமல் கழிவு நீர் சீராக செல்லும் வகையிலும் வெள்ள வடிகால் மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும். மாவட்ட, கோட்ட மண்டல மையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். அதில் வருவாய், காவல்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, மின்சாரம் போன்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்கள் ஊடகங்கள் மூலம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும். மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பணியில் சேரவும், விடுமுறையில் இருந்தால் தலைமையகத்தில் இருக்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் செயலக ஊழியர்கள் உள்ளூரில் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். கோட்ட அளவில் ஆர்.டி.ஓ.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் தங்கள் பகுதியில் மனித, விலங்குகள் சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் திட்டங்களை எடுத்து, அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து மக்களை உஷார்படுத்த வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, தேவையான இடங்களில் மறுவாழ்வு மையங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.

புனர்வாழ்வு மையங்களில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும். மண்டல அளவில் உள்ள தாசில்தார்களும், எஸ்.எச்.ஓ.க்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் பெட்ரோல் பங்க்கில் டீசல், பெட்ரோல் போதுமான அளவு இருப்பு வைத்து, காஸ் சிலிண்டர்கள் இருக்க வேண்டும்.கிராமங்கள் மற்றும் நகரங்களில், டிபிஓ மற்றும் நகராட்சி துறைகள் அழுக்கு வடிகால்களை முழுமையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் ஆர்டபிள்யுஎஸ் துறை பாதுகாக்கப்பட்ட நன்னீர் மற்றும் முறையான ப்ளீச்சிங் வழங்குவதில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாலைகள் குறித்து பஞ்சாயத்து ராஜ், ஆர்அன்ட்பி துறைகள் மற்றும் நீர்ப்பாசனத் துறையினர் தங்கள் பணியாளர்களை நியமித்து, குளங்கள், ஓடைகள், வளைவுகள், தரைப்பாலங்களை கண்காணிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் எப்போதும் முழுப் பொறுப்புடன் கடமைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விஜயவாடாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் உடனடியாக திரும்பி வர வேண்டும் என்றும், வரும் 17ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழையால் சாலை இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பொறியியல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குளங்கள், கால்வாய்கள் வலுவிழந்து உள்ள கண்மாய்களை நீர்ப்பாசனத்துறை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post குறைந்த காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை எதிரொலி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi Collector ,Tirupati ,Rayalaseema district ,Tirupati Collector ,Cuddalo ,Tirupati Collector's Office ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி...