×

இளம்பெண்ணிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு தர்ம அடி

பெரம்பூர்: கொளத்தூர் அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவர் மீது 7 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெரம்பூர் குமரன் நகர் 7வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள கடையில் நின்று சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது இந்த கடைக்கு வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிக்கன் பக்கோடா வாங்க வந்தனர். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து அவரது மனைவி துப்பட்டாவை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் சத்யா தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டு தனது நண்பர்களான முத்துவேல் மற்றும் லோகு ஆகிய இருவரையும் பைக்கில் அழைத்து வந்து அங்கிருந்த தேவாவை சரமாரியாக தாக்கினார். மரக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்ட தேவா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் அடைந்துள்ளதால் தேவா மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவிக நகரைச் சேர்ந்த சத்யா ஜித்தேந்தர் (23), முத்துவேல் (23), லோகேஷ் (23), கோவிந்தராஜ் (24), பாலாஜி (22) மற்றும் கோபி (26) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண்ணிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Deva ,Kolathur Annai Satyanagar ,street ,Perambur Kumaran Nagar ,
× RELATED பாலா படத்தில் நடிக்கிறது சும்மாவா...Prabhu Deva Mass Speech at Petta Rap Audio Launch | Vedhika