×

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது: கூட்டாளிகளுக்கு வலை

வளசரவாக்கம்: தி.நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் (42), தி.நகர் கிரியப்பா சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், எங்கள் தனியார் நிறுவனம் மூலம் சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறோம்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தில் கணக்குகளை சரிபார்த்த போது, எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து ரூ.1 கோடி வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

போலீசார் விசாரணையில், ஆர்.ஏ.புரம் ராதாகிருஷ்ணபுரத்தை சேர்ந்த பிரபு (40) என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுக சிறுக ரூ.1 கோடி வரை கையாடல் செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து பிரபுவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.63.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது: கூட்டாளிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,D. Nagar ,Karthik Kumar ,Kunradthur ,D. Nagar Kiriyappa Road ,Dinakaran ,
× RELATED தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை...