சென்னை: தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள் என்று முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த தவெக அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். மக்கள் தற்போது ‘துஷ்ட சக்தி’ ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’ எங்களின் போக்கை யாரும் மாற்ற முடியாது என்ற இருமாப்போடு ஒருசில காவல் துறையினர் செயல்படுவதும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும், தொடர்கதையாகி வருகின்றன.
சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். விலை மதிப்பற்ற உயிர்களுக்கு – உயிரே உன் விலை என்ன என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்த குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுன்டர்களும், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிகாரம் மிக்கவர்களை காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற செயல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவைகளையெல்லாம் விரைவில் தடுத்துவிடுவோம் என்று அமைச்சர்களை விட்டு சொல்ல வைப்பது, ‘குதிரைகள் ஓடிய பின்னால், லாயத்தை பூட்டுவதற்கு’ சமமான ஒன்றாகும்.
‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் – ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தை தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை’ என்பதை, தவெக முதல்வர் உணர வேண்டும். மாற்றத்தை வேண்டி தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு, மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
