தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முழு பிராந்தியமும் தீக்கிரையாகும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலகப்போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல்களை, ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை வரை (நாளை) நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முழு பிராந்தியமும் தீக்கிரையாகும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெதன்யாகுவின் கட்டளைகளைப் பின்பற்றும் ட்ரம்ப் அமெரிக்க மக்களை நரக வேதனையில் தள்ளுகிறார். போரால் எதையும் சாதிக்க முடியாது. ஈரானின் உரிமைகளை மதித்து, இதை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே தீர்வு எம ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
