காஞ்சிபுரம், ஏப்.5: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவினம் குறித்து அமலாக்க முகமைகள் ஆய்வுக் கூட்டம் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவினம் தொடர்பான அமலாக்க முகமைகளுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழக சட்டசபை தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமை தாங்கி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு, வாக்குச்சாவடி கண்காணிப்பு, நேரடி ஒளிபரப்பு பணப்புழக்கம், சட்டவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள், புகார் மேலாண்மை மற்றும் உடனடி நடவடிக்கை அமைப்பு, ஆய்வு மற்றும் தணிக்கை தொடர்பாக அறிவுரைகள் குறித்தும், சிறப்பு கண்காணிப்பாளர் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும், பணப்புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையாக கண்காணிக்க வேண்டும். ஜடி தொடர்பு அலுவலர், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் மீது உடனடி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் பொதுத்தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி ஜவஹர், வருமானவரி அலுவலர், உதவி ஆணையர்(கலால்), மாவட்ட செலவின மேலாண்மை குழு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
