×

சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை ரத்து; நிலுவை வழக்குகளை வாபஸ் பெற அரசு வக்கீல்களுக்கு உத்தரவு: ஒன்றிய அமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சிறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற அரசு வழக்கறிஞர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்கும் வகையில் ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத்தின் இரண்டாவது பதிப்பை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, சுதந்திரத்திற்கு முந்தைய கால சட்டங்கள் உட்பட 79 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 1,000 சட்ட விதிகளின் கீழ் வரும் குற்றங்கள் இனிமேல் குற்றவியல் நடவடிக்கையாக கருதப்படாது. இதற்குப் பதிலாக அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘மக்கள் தங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். புதிய சட்ட விதிகளின் கீழ், பழைய வழக்குகளை முடித்து வைக்கக் கோரி அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை அணுகலாம். இதன் மூலம் நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். சிறு குற்றங்களுக்காக இனிமேல் நீண்ட கால நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளே நேரடியாக அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளை சந்திப்பவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை அணுகி, புதிய சட்டத்தின்படி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரலாம். அதே நேரத்தில், பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தீவிரமான குற்றங்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படுவது தொடரும். ஏற்கனவே 12 மாநிலங்கள் தங்களது சொந்த ஜன் விஸ்வாஸ் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன’ என்றார். இந்த சட்டத் திருத்தத்தின்படி, சுகாதாரத் துறையில் செய்யப்படும் சிறு தவறுகளுக்கு இனிமேல் சிறைத்தண்டனை கிடையாது.

மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், பார்மசி சட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் உள்ள நடைமுறைத் தவறுகளுக்கு சிறைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அதேசமயம், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற தீவிரமான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை மாற்றப்படாமல் அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Minister ,New Delhi ,Union government ,Jan Vishwas'… ,
× RELATED மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய...