×

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதவி பறிப்பு எதிரொலி; மவுனத்தை தோல்வியாக கருதவேண்டாம்: ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ராகவ் சதா பதிலடி

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகவ் சதா, தன்னை அமைதிப்படுத்த நினைப்பவர்களுக்குப் பயப்படப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஆளும் ஆம்ஆத்மி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவ் சதா, கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நீக்கம் தொடர்பான நோட்டீஸில் கையெழுத்திட மறுத்தது மற்றும் அவையில் வெளிநடப்பு செய்ய கட்சி உத்தரவிட்டபோது அதை மீறியது போன்ற விசயங்கள் குறிப்பிடப்பட்டன.

இந்த நிலையில், அவரை கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி ஆம் ஆத்மி கட்சி உத்தரவிட்டது. இது தொடர்பாக ராகவ் சதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘நாடாளுமன்றத்தில் பேசும் எனது உரிமையைப் பறிப்பவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், எனது மவுனத்தைத் தோல்வியாகக் கருத வேண்டாம். சரியான நேரம் வரும்போது பேசுவேன். சாமானிய மக்களின் பிரச்னைகளைப் பேசுவது குற்றமா? நான் பேசக்கூடாது என மாநிலங்களவை செயலகத்திற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைமை கடிதம் எழுதியுள்ளது ஏன்? ஏர்போர்ட்டில் உணவுகளின் விலை உயர்வு, டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள் எனப் பல விவகாரங்களைப் பேசியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ‘வங்கதேசத்தில் வாக்குகள் நீக்கம், குஜராத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது வழக்கு, பஞ்சாப் நிதி விவகாரம் போன்ற முக்கியப் பிரச்னைகளை எழுப்பக் கட்சி உத்தரவிட்டால், ராகவ் சதா ஏர்போர்ட் சமோசா விலை பற்றியும் பிட்சா டெலிவரி பற்றியும் பேசுகிறார். அவர் வேறு யாருக்கோ சாதகமாகப் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. பயந்தவன் செத்தவனுக்குச் சமம்’ என்று தெரிவித்தார்.

மேலும், ஆம்ஆத்மியை சேர்ந்த ராஜ்யசபா குழுத் தலைவர் சஞ்சய் சிங் மற்றும் டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஆகியோர் கூறுகையில், ‘ஒன்றிய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் பயந்து கொண்டு ராகவ் சதா செயல்படுகிறார். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, பாஜகவுக்குப் பயந்து கொண்டு லண்டனுக்கு ஓடிவிட்டார். ஆனால் இன்று வெறும் விளம்பரத்திற்காக மட்டும் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்’ என்று குற்றம் சாட்டினர். தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ராகவ் சதா, பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,Raghav Sada ,Aamatmi ,New Delhi ,Rajya Sabha ,Deputy Chairman ,Yes Atmi Party ,Amaatmi ,Punjab ,B. Yagadh Chosen ,Raghav ,
× RELATED அசாம் தேர்தல் பிரசாரத்தின்போது அமித்...