கரஜ்: ஈரான் நாட்டின் தலைநகர் அருகே உள்ள முக்கிய பாலம் அமெரிக்க கூட்டுப்படையினரால் ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதில் 8 பேர் பலியாகினர். மத்திய கிழக்கு நாடுகளின் மிக உயரமான பாலம் என்ற பெருமை கொண்ட பி1 பாலம், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரஜ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று கரஜ் பகுதியில் உள்ள 136 மீட்டர் உயரமுள்ள பி1 பாலத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் அடுத்தடுத்து இரண்டு முறை தாக்குதல் நடத்தினர்.
முதலில் ஒருமுறை பாலம் தாக்கப்பட்டவுடன், அங்கு காயமடைந்தவர்களுக்கு மீட்பு குழுவினர் உதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது ‘டபுள் டேப்’ முறையில் மீண்டும் இரண்டாவது முறையாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 95 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘பி1 பாலம் இனிமேல் பயன்பாட்டுக்கு வராது’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த 1ம் தேதி மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், ‘ஈரான் அரசு புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம்.
அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் மீது மிகக்கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், ‘பாலங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டு இடங்களை தகர்ப்பது அமெரிக்காவின் வீழ்ச்சியை காட்டுகிறது. இதுபோன்ற செயல்களால் ஈரானை பணிய வைக்க முடியாது’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலடியாக குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய பாலங்களை தாக்குவோம் என ஈரான் ஆதரவு ஊடகங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
