×

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.!! மூதாட்டி உயிரிழப்பு.. சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

கடலுக்கு அடியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக வடக்கு இந்தோனேசியாவின் சில பகுதிகளில் கட்டிடங்கள் தரைமட்டமான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.

இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தினால் சுனாமி அலைகள் உருவான சம்பவமும் அங்கிருக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. கடும் நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்தன. மேலும், சில இடங்களில் கட்டடங்கள் பயங்கர அதிர்வுடன் குலுங்கின.

இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை அமைப்பு அளித்துள்ள தகவலின் படி, வடக்கு சுலவேசி மாகாணத்தின் பிதுங் மற்றும் அண்டை மாகாணமான வடக்கு மலுக்குவின் டெர்னேட் நகரில் 10 முதல் 20 வினாடிகள் வரை கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த மாகாணங்கள் மொலுக்கா கடலை ஒட்டியுள்ளன, இங்குதான் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

டெர்னேட்டின் சில பகுதிகளில், ஒரு தேவாலயம் மற்றும் இரண்டு வீடுகள் உட்பட, லேசானது முதல் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதே நேரம் பிதுங் பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த மதிப்பீடுகள் இன்னும் நடைபெற்று வருவதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வடக்கு சுலவேசியின் மனாடோ நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும், டெர்னேட்டில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் தூக்கத்திலிருந்தோம். திடீரென்று நிலஅதிர்வை உணர்ந்து எழுந்த போது பாதிப்பு கடுமையானது போல தோன்றியதால் நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடினோம்,” என்று அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Indonesia ,northern Indonesia ,
× RELATED நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இருந்து...