×

ஆர்டெமிஸ் 2 – அரை நூற்றூண்டுக்கு பிறகு மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பியுள்ள நாசா.!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 விண்வெளி வீரர்களை விண்கலம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மனிதர்கள் கடைசியாக நிலவிற்கு பயணம் செய்து 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அமெரிக்காவின் நாசா தற்போது நிலவின் மேற்பரப்பை அதில் தரையிறங்காமல் ஆய்வு செய்ய இன்று அதிகாலை 4 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

இவர்கள் செல்லும் ஓரியன் விண்கலம் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு சீறி பாய்ந்தது. அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள 4 விண்வெளி வீரர்களும் தங்கள் 10 நாள் பயணத்தில் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

அமெரிக்காவின் இந்த ஆய்வு திட்டம் மனிதர்களுக்கு நிலவில் நிலையான இருப்பை ஏற்படுத்துவதற்கான முக்கிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. நிலவிற்கு மனிதர்கள் அனுப்பப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது ஆர்டெமிஸ் 2 மூலம் நிலவை சுற்றி வந்து அதன் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை நாசா மேற்கொள்கிறது.

இந்திய நேரப்படி அதிகாலை 3.54 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது நிலவை நோக்கி நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச், மற்றும் கனடா விண்வெளி வீரரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பயணித்து வருகின்றனர், இவர்கள் 10 நாட்கள் பயணமாக நிலவை சுற்றிவரவுள்ளனர். பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு, ஓரியன் விண்கலம் இவர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும்.

இந்த திட்டத்தின்படி தற்போது விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். மாறாக நிலவை சுற்றி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல நிலவை இவர்கள் செல்லும் விண்கலம் வட்டமிடும்போது, நிலவின் மறு பக்கத்துக்கு அப்பால் 7,400 கிலோமீட்டர் செல்வதன் மூலம், மனித வரலாற்றில் தொலை தூர விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் சாதனையையும் இவர்கள் படைக்க உள்ளனர்.

Tags : NASA ,United States ,
× RELATED ஈரான் உடனான போர் அமெரிக்கவின் பெயரையே...