×

தூர் வாரப்பட்ட பாசன கால்வாய் சிமெண்ட் தளமாக புனரமைப்பு

* முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

உடுமலை : நீண்ட கால கோரிக்கையை ஏற்று பிஏபி மற்றும் அமராவதி கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி திட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.அணையில் துவங்கும் பிரதான கால்வாய் வெள்ளகோவில் வரை சுமார் 134 கிமீ தூர நீளம் கொண்டது. இதுதவிர, ஏராளமான கிளை கால்வாய், பகிர்மான கால்வாய்கள் உள்ளன.

இதேபோல அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த இரு அணை கால்வாய்கள் புதர்மண்டி, கரைகள் பெயர்ந்து மண் குவிந்து கிடந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, கால்வாய்களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு முழுவதும் புதர் மண்டி காணப்படும் கால்வாய்களை தூர் வார துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலை வந்தபோது, அவரிடம் பிஏபி மற்றும் அமராவதி கால்வாய்கள் தூர்வாருவது தொடர்பாக விவசாயிகள் மனு அளித்தனர்.

இதையடுத்து, பிஏபி கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க ரூ.10 கோடியும், அமராவதி கால்வாய்களை சீரமைக்க ரூ.5.50 கோடியும் நிதி ஒதுக்கியும் முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, பிஏபி திட்டத்தில் ரூ.2.88 கோடியில் 44 பணிகள் திருமூர்த்தி கோட்டத்தின் மூலமாகவும், ரூ.2.15 கோடியில் 27 பணிகள் பரம்பிக்குளம் கோட்டத்தின் மூலமாகவும், ரூ.4.9 கோடியில் 83 பணிகள் ஆழியாறு வடிநில கோட்டத்தின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, புதர்மண்டி காணப்பட்ட கால்வாய்களில் செடி, கொடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. இரு கரைகள் மற்றும் தரை தளத்தில் சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டன.

இதேபோல், ரூ.5.50 கோடியில் அமராவதி பிரதான கால்வாயில் 13 கீழ்மட்ட குகை வழிப்பாதைகள், தலா 20 மதகுகள் மற்றும் கதவணைகள், 314 கிமீ தூரத்துக்கு சேதமடைந்த ஸ்லாப்புகள் மறுசீரமைக்கப்பட்டன. இதன்காரணமாக தங்கு தடையின்றி பாசன நீர் செல்லும் வகையில் புதுப்பிக்கப்பட்டன, நீர்கசிவும் தடுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பிஏபி மற்றும் அமராவதி பாசன விவசாயிகள் கூறியதாவது:கால்வாய்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால் பாசன நிலத்துக்கு தண்ணீர் வராமல் மிகவும் சிரமப்பட்டோம். பல நேரங்களில் பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் காய்ந்து போயின.

கால்வாய்களில் அதிகளவு நீர்கசிவும் இருந்தது.அதிமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கால்வாய்களை தூர் வார நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இதன்காரணமாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளன. புதர் மண்டி அடையாளம் தெரியாமல் காணப்பட்ட கால்வாய்களை தற்போது சிமெண்ட் தளத்துடன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

இதனால் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். நீர் நிலைகளை பராமரிப்பதும், பாசனத்துக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் தான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம். அந்த வகையில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

Tags : Chief Minister ,Udumalai ,BAP ,Amaravati ,Coimbatore ,Tiruppur ,Thirumurthy dam ,
× RELATED கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர்...